Saturday, June 29, 2024
Home » கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

நல்ல விளைவும் பக்கவிளைவும்!

சுந்தரராஜனுக்கு திடீரென்று ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. ‘வலது கண்ணில் மட்டும் நீர் கோர்த்த மாதிரி, உருவங்கள் எல்லாம் லேசா சாய்ந்த மாதிரித் தெரியுது’ என்றார். பரிசோதனை செய்து பார்க்கையில் அவரது விழித்திரையின் நடுப்பகுதியில் வீக்கம் காணப்பட்டது. அந்த விஷயத்தை அவரிடம் விளக்கப் போகையில் அவரது கை விரல்கள் சற்று வளைந்திருந்ததைக் கவனித்தேன். நடக்கும் பொழுதும் சற்று சிரமப்பட்ட படியே வந்தது முதலிலேயே தெரிந்தது. ‘வேற ஏதாவது நோய்க்காக மருந்து, மாத்திரை சாப்பிடுறீங்களா?’ என்று கேட்டதற்கு, ’’எனக்கு வாத நீர்ப் பிரச்சனை ரொம்ப வருஷமா இருக்கு. ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டி ட்ரீட்மென்ட் எடுக்கிறேன்’’ என்றார்.

பொதுவாக Rheumatoid arthritis பிரச்சனைக்குக் கொடுக்கப்படும் ஒரு மாத்திரையான Hydroxy chloroquine (HCQ)க்கு விழித்திரைப் பாதிப்புகள் (chloroquine maculopathy) வரக்கூடும். (நினைவிருக்கிறதா, கொரோனா காலத்தில் இந்த மாத்திரை நம் எதிர்ப்பாற்றலை மேம்படுத்த அல்லது மாற்றக்கூடிய ஒன்று (immuno modulatory) என்ற செய்தி பரவ, பலர் தாங்களாகவே மருந்துக்கடைகளில் சென்று இந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டனர்.

அதன் பின் இந்த மருந்துக்குக் கடும் தட்டுப்பாடும் நிலவியது!) சுந்தரராஜனிடம், ‘உங்கள் பழைய சிகிச்சை அறிக்கையைக் கொண்டு வாருங்கள்’ என்று கூற, மறுநாளே அதை எடுத்து வந்தார். நான் எதிர்பார்த்தது போலவே பல ஆண்டுகளாக HCQ உட்கொண்டு வந்திருந்தார். விழித்திரையில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய மாத்திரைகளில் முக்கியமானவை quinine வகை மருந்துகள். இதைப் பரிந்துரைக்கும் ஒவ்வொரு உயர் சிறப்பு நிபுணரும் கண் மருத்துவரிடம் சீராகப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று நிச்சயம் கூறுவார்கள்.

சுந்தரராஜனின் மருத்துவரும் அந்த விஷயத்தைச் சொல்லியிருந்தார். பரிந்துரைச் சீட்டில் தெளிவாக எழுதியும் இருந்தார். ஆனால் நாளடைவில் வாதநீர் பிரச்சனையின் அறிகுறிகள் சற்றே மட்டுப்படவும், வாதநோய் சிறப்பு நிபுணரிடம் தொடர் பரிசோதனைக்குச் செல்லாமல் தானாகவே அந்த மருந்துகளை வாங்கித் தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் சுந்தரராஜன். அதனால் வந்த பின்விளைவு தான் இது.

உடனடியாக மருந்தை நிறுத்திவிட்டு, வீக்கத்தைக் குறைக்கும் வண்ணமாக சில மருந்துகளைப் பரிந்துரைத்து அவரைத் தொடர் பரிசோதனைக்கு வரச் செய்தேன். இப்போதும் மாதா மாதம் சரியாகப் பரிசோதனைக்கு வந்துவிடுகிறார். இருந்தாலும் முழுமையான அளவு பார்வை மீளவில்லை. மலேரியா நோய்க்கு chloroquine மாத்திரை பரவலாக வழங்கப்பட்டுவந்த நேரம் அந்த மாத்திரையின் பின்விளைவாக விழித்திரையில் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மெல்ல மெல்ல chloroquineக்கு பதிலாக அதைவிட ஆற்றல் மிக்க மாத்திரைகள் சந்தைக்கு வந்தபின் கண்பாதிப்பு வெகுவாகக் குறைந்தது. தீவிர கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப் பட்டதால் மலேரியா நோயின் தாக்கமும், இந்த மாத்திரையின் பயன்பாடும் குறைந்திருக்கிறது.

பல உடல் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் ஊசிகளால் கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதில் ஒன்று காசநோய் கூட்டுமருந்து சிகிச்சையின் ஒரு முக்கிய மாத்திரையான Ethambutol. தாயம்மாள் எங்கள் அரசு மருத்துவமனையில் நீண்டகால உள்நோயாளியாக இருந்தவர். காசநோய் சிகிச்சையை அரைகுறையாக எடுப்பார், பின் சொல்லச் சொல்லக் கேட்காமல் ஓடிவிடுவார். வீட்டிற்குச் சென்று மாத்திரை கொடுத்தாலும் சாப்பிட்டேன் என்று ஏமாற்றிவிட்டு மாத்திரையை நிறுத்தி விடுவார். அவருக்கு ஒரு முறை கண்களில் கோளாறு வந்தது. பரிசோதித்துப் பார்க்கையில் முதலில் வண்ணங்கள் சரியாகத் தெரியவில்லை.

பின் ஆப்டிக் நரம்பும் சற்று பாதிக்கப்பட்டது. அப்பொழுது அவர் மூன்றாவது முறையாக கூட்டு மருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அதில் இருக்கும் Ethambutol மாத்திரையை மட்டும் நிறுத்திவிட்டு கண் நரம்பு வீக்கத்திற்காக சிகிச்சையைத் தொடங்கினோம். ஒரு சில நாட்களில் பார்வை மீண்டது.ஸ்டீராய்டு மருந்துகள் கண்களில் பல நேரடி விளைவுகளை ஏற்படுத்துவதில் முதன்மையானவை. ஆஸ்துமா, வாதநீர்ப் பிரச்சனைகள் தன்னுடன் எதிர்ப்பு நோய்கள் போன்ற பல நோய்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை மாமருந்துகளாய் இருக்கின்றன.

உடலியல் நோய்க்காகத் தொடர்ச்சியாக ஸ்டீராய்டைப் பரிந்துரைக்கும் நிபுணர் எவராக இருந்தாலும், உங்களுக்கு நிச்சயம் ஸ்டீராய்டு மருந்தின் பக்கவிளைவுகளைப் பற்றி அறிவுறுத்துவார். ஸ்டீராய்டு மருந்தினால் சர்க்கரைநோய், அல்சர், ரத்தக் கொதிப்பு போன்றவற்றுடன் கண்களில் புரை வளரக் கூடும். அதனால் கண் மருத்துவரிடம் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று நிபுணர் உங்களிடம் கூறுவார்.

பொதுவாக வயது முதிர்ந்த பின் 60 வயது வாக்கில் கண்புரை வளர்வதும், அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதும் அனைத்து மனிதர்களுக்கும் நடக்கும் இயல்பான விஷயம் என்பதை நாம் அறிவோம். சிறுவயதில் இருந்தே ஸ்டீராய்டு பயன்படுத்துபவர்களுக்கு 40 வயதிலோ அதற்கு முன்னதாகவோ கூட கண்புரை வளரக்கூடும். என்னுடைய தினசரி அனுபவத்தில் ஸ்டீராய்டு உட்கொண்ட நோயாளிகள் பலர் சிறுவயதிலேயே கண்புரை சிகிச்சை மேற்கொண்டு நலமுடன் இருப்பதைக் காண்கிறேன்.

கண்புரை மட்டுமின்றி கண்ணழுத்த நோய், விழித்திரைப் பாதிப்புகள், கிருஷ்ணபடலத்தில் சில பாதிப்புகள் என்று பலதரப்பட்ட கண் பிரச்சனைகளை ஸ்டீராய்டு மருந்துகள் உருவாக்க வல்லன. எனவே இவற்றை பயன்படுத்தும் போது தொடர் சிகிச்சையும் கண்காணிப்பும் மிக அவசியம். ‘ஸ்டீராய்டால் கண்களுக்குப் பாதிப்பா? அப்படியானால் அதைத் தொடவே மாட்டேன்’ என்கிறீர்களா? அதுவும் மிகத் தவறான எண்ணம்தான். மேலே கூறிய தீவிர நோய்கள் சிலவற்றிற்கு ஸ்டீராய்டு மட்டும்தான் தீர்வு. இது போன்ற சந்தர்ப்பங்களில், ஒரு தராசின் ஒரு புறத் தட்டில் ஸ்டீராய்டின் பலனையும், இன்னொரு தட்டில் அதன் பக்க விளைவுகளையும் வைத்து நிறுத்துப் பார்த்தால் பக்கவிளைவுகள் மிகமிகக் குறைவு என்றே சொல்வேன் நான். கூடவே இந்தப் பக்கவிளைவுகள் அனைத்தும் எளிய சிகிச்சைகளால் சரி செய்யக்கூடியவையே.

முதன்மையான நோய்க்குச் சிகிச்சை அளித்து வாழ்நாளை நீட்டிப்பதும் பக்க விளைவுகளால் ஏற்படும் தொந்தரவுகளைத் தடுப்பதும் மட்டுமே மருத்துவரின் இலட்சியமாக இருக்கும். எனவே இங்கு நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புவது தொடர் பரிசோதனையையும், சிகிச்சையையும் மருத்துவர் அறிவுறுத்தியபடி உறுதியாகக் கடைப்பிடிப்பதைத் தான்.இதயநோய்களுக்கு தொடர்ச்சியாக மாத்திரை எடுப்பவர்கள் சிலர், அவ்வப்போது கண்களில் வெளிச்சம் வந்தாற் போல் தெரிகிறது, வண்ணங்கள் சரியாகத் தெரியவில்லை என்றெல்லாம் சொல்வதைப் பார்க்கிறோம். அவர்களிடம் உங்கள் மாத்திரைகளை கொடுங்கள் என்று வாங்கிப் பார்த்தால், அவர்கள் இதயத்துடிப்பை சீராக்குவதற்கான amiodarone, digoxin போன்ற மாத்திரைகளை எடுப்பவர்களாக இருப்பார்கள்.

சுவாரசியமான ஒரு விஷயமாக, digoxin மாத்திரையை எடுப்பவர்களுக்கு மஞ்சள் மற்றும் பச்சை நிறங்கள் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாகத் தோன்றும். அதாவது பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியும். இதயவியல் மருத்துவரிடம் ஆலோசித்து அவற்றிற்கான அளவு (dose) மற்றும் காலத்தைக் (duration) குறைக்க முயலலாம். அல்லது முடிந்தால் அந்த மாத்திரைக்குப் பதில் வேறொரு பொருத்தமான மாத்திரையைத் தருவார் இதய மருத்துவர்.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிறோம் அல்லவா? இந்தப் பழமொழி சில சத்து மாத்திரைகளின் விஷயத்திலும் பொருந்தும். ஒரு சிறுவனுக்கு லேசான கண் பார்வைக் குறைபாட்டிற்காகக் கண்ணாடி அணிய வேண்டும் என்று மருத்துவர் கூற, அவனது பெற்றோர் விட்டமின் A கொடுத்தால் கண்ணுக்கு நல்லது தானே, கண்ணாடி அணிய வேண்டியதிருக்காதே என்ற எண்ணத்தில் தாங்களாகவே வைட்டமின் A மாத்திரையை வாங்கி மாதக்கணக்கில் கொடுத்திருக்கிறார்கள்.

வைட்டமின் A மற்றும் வைட்டமின் D, E, K ஆகியவை கொழுப்பில் கரையக்கூடியவை (fat soluble vitamins). பிற விட்டமின்களான வைட்டமின் B மற்றும் C இவை நீரில் கரையக்கூடியவை. Vit B,C யை உடலின் தேவையை விட அதிகமாக உட்கொண்டால், உபரி மருந்து சிறுநீரில் கலந்து வெளியேறிவிடும். ஆனால் வைட்டமின் D மற்றும் A அப்படியல்ல. அவை கொழுப்பில் கரையக்கூடியவை என்பதால் ரத்தநாளங்கள் வழியே மிக எளிதாக மூளையில் நுழைந்து உள்ளே அழுத்தத்தை (intra cranial hypertension) அதிகரிக்கச் செய்கின்றன.

இதுபோலவே வலிப்புநோய்க்கு பயன்படுத்தும் Vigabatrin போன்ற சில மருந்துகளும் மூளைக்குள் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து அதிக தலைவலி, வாந்தி, மயக்கம் இவற்றை சில சமயங்களில் ஏற்படுத்துகின்றன. இத்தகைய நோயாளிகளின் கண்களைப் பரிசோதனை செய்து பார்த்தால் ஆப்டிக் நரம்பைச் சுற்றி வீக்கம் (papilledema) இருப்பதைப் பார்க்க முடியும். இந்த அறிகுறியைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு அடுத்தடுத்த பரிசோதனைகளைச் செய்தால் மூளைக்குள் அழுத்தம் அதிகரித்ததன் காரணத்தை எளிதில் கண்டுபிடித்து விட முடியும். மேலே கூறிய சிறுவனுக்கு தலைவலியும் வாந்தியும் ஏற்பட்டது.

பரிசோதனையில் ஆப்டிக் நரம்பில் வீக்கம் இருப்பது தெரிய, விலாவாரியாகப் பல கேள்விகளை எழுப்பி, வைட்டமின் A மாத்திரைகள் அதிகம் எடுத்ததைக் கண்டுபிடித்தோம். உடனடியாக அவற்றை நிறுத்திவிட்டு மூளையின் வீக்கத்தைக் குறைக்கச் செய்வதற்கான மருந்துகளைக் கொடுத்ததில் சில நாட்களில் அந்தச் சிறுவன் இயல்பாகி விட்டான். வைட்டமின் ஏ யின் நெருங்கிய உறவினர்களில் ஒன்றான retinoids மருந்துகள் முகப்பருக்கள் உள்ளிட்ட சில தோல் நோய்களிலும், சிலவித ரத்தப்புற்று நோய்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் பயன்பாட்டிற்குப் பின்னரும் தலையில் அதிக நீர் கோர்த்து, கண் நரம்புகளில் வீக்கம் தெரிய வாய்ப்பிருக்கிறது.

‘‘அட! மருந்துகளால் இத்தனை பக்க விளைவுகளா?’’ என்று அச்சப்படத் தேவையில்லை. சில மருந்துகளால் கண்களில் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி இங்கே கூறுவதன் நோக்கம், சுயமருத்துவத்தைத் தடுப்பதே! லேசான அறிகுறி ஏற்பட்டாலும் உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால் மேலே கூறிய மருந்துகளின் பக்க விளைவுகளை முழுவதுமாக நீக்கிவிடலாம் என்பதும் மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி!

You may also like

Leave a Comment

one + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi