சென்னை :சென்னை மாநகராட்சி சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் கூடுதலாக 5 பணியாளர்கள் நியமனம் செய்ய மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தினக்கூலி அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 687 ஊதியமாக வழங்கப்படும் என்றும் பணியாளர் ஒருவருக்கு மாதம் ரூ.20,610 ஊதியமாக வழங்கிடவும் மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு வழங்கியது சென்னை மாநகராட்சி. ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.325 ஆக உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே நாய்க்கடி பிரச்சனை தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, “சென்னையில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நாய்கடி பிரச்னை தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாய் வளர்ப்பு விஷயத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவர அமைச்சரிடம் சென்னை மாநகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய மேயர் பிரியா, “சென்னை மாநகராட்சியில் கால்வாய், மழைநீர் வடிகாலை ஆண்டு முழுவதும் தூர்வார முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் மழைநீர் வடிகால்களைத் தூர்வார முதற்கட்டமாக வார்டு ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஒப்பந்தந்தாரர்களுக்கு பதில் மாநகராட்சியே மழைநீர் வடிகால்களைத் தூர்வார ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.