நம்ம ஊரில் பிரியாணி மாதிரி காபூலி புலாவ் உலகத்தின் பல நாடுகளில் பேமஸான உணவாக இருக்கிறது. இந்தக் காபூலி புலாவ் உருவான நாடு எது எனப் பார்த்தால் ஆப்கானிஸ்தானைக் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள உஸ்பெகிஸ்தானின் எல்லைப் பகுதிதான் இந்த உணவின் பிறப்பிடம் என யூகிக்கிறார்கள். நமது ஊரில் புலாவ் என்றால் அது காலை நேரத்தில் தயாரிக்கப்படும் சைவ உணவாகவே அறியப்படுகிறது. ஆனால், இந்தக் காபூலி புலாவ் என்பது ஆடு மற்றும் மாடுகளின் இறைச்சியைக் கொண்டு தயாரிக்கப்படும் அசைவ உணவு. இந்த உணவைத் தயாரிப்பதற்கு ஆடு மற்றும் மாடுகளின் இறைச்சியைஅப்படியே பயன்படுத்தமாட்டார்கள்.
அந்த இறைச்சியின் குறிப்பிட்ட சதைப் பகுதிகளை மட்டுமே எடுத்துத் தயாரிக்கப்படுகிறது காபூலி புலாவ். பிரியாணியைப் போலவே அரிசியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு என்பதாலேயே சில நாடுகளில் முக்கிய விருந்துகளில் இந்த உணவு இடம் பிடிக்கிறது. வேகவைத்த அரிசியோடு திராட்சை, கேரட் போன்ற பொருட்களைச் சேர்த்து பல நறுமணப்பொருட்களையும் இட்டு சமைக்கப்படும் இந்த உணவு ஆப்கானிஸ்தானில் தெருவோர உணவாகவும், நட்சத்திர உணவகங்களில் ஓர் இன்றியமையாத உணவாகவும் பலரால் ருசிக்கப்படுகிறது. இவ்வளவு பிரபலமான இந்த உணவு கபேலி புலாவ், உஸ்பெக் புலாவ், புகாரி அரிசி என ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது.