சென்னை: சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், சென்னை தி.நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக தென்சென்னை வடமேற்கு மாவட்ட செயலாளருமான சத்யா மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்துள்ள இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. எனவே, இவர் மீதான வழக்கை விரைந்து விசாரித்து முடித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இந்த வழக்கில் மீதான புலன் விசாரணை நடந்து வருகிறது. நான்கு மாதத்திற்குள் இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.