சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று மாலை சென்னையில் நடக்கிற திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பேருரையாற்ற சோனியா காந்தி வருகிறார். அவருடன் பிரியங்கா காந்தியும் உரையாற்றுகிறார். 13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியின் இறுதியில் இருக்கிற பாஜ மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் நிறைவேற்றியது. இந்த மசோதா, ராகுல்காந்தி கூறியபடி நடைமுறைக்கு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். இதுதான் பாஜ மகளிரை ஏமாற்றுகிற அரசியலுக்கு உரிய சான்றாகும். சோனியா காந்தியை பொறுத்தவரை திமுக தலைவர் கலைஞரோடும், இன்றைய தலைவர் மு.க.ஸ்டாலினோடும் சரியான புரிதல் காரணமாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் மகத்தான ஆட்சி மாற்றங்கள் அமைய பெரும் துணை புரிந்தது.
அத்தகைய சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் சென்னை வந்துள்ளனர். இன்று மாலை 4.30 மணிக்கு அவர் தங்கியிருக்கிற சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இருந்து புறப்பட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகிறார். மகளிர் மாநாட்டிற்கு வரும் இவர்களை அண்ணா சாலையின் இருபுறங்களிலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி அமைப்புகளை சார்ந்தவர்கள் பெரும் எழுச்சியோடு, பெருந்திரளாக பங்கேற்று எழுச்சி மிக்க வரவேற்பை நன்றிப் பெருக்கோடு அளித்திட கேட்டுக் கொள்கிறேன்.