சென்னை: திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியல்களை அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு கருத்துக்களை அண்ணாமலை தெரிவித்துள்ளார். எனவே,அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கின் விசாரணைக்கு ஜூலை 14ம் தேதி நேரில் ஆஜராகும்படி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.