சென்னை: திமுக மாணவர் அணி நகர, பகுதி, ஒன்றியம், பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாநில செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நகர, பகுதி, ஒன்றியம், பேரூர் அமைப்பாளர்- துணை அமைப்பாளர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நகர, பகுதி, ஒன்றியம், பேரூர் அமைப்பிற்கு ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.
துணை அமைப்பாளர்களில் ஒருவர் ஆதிதிராவிடர், பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராகவும் மற்றும் பெண் துணை அமைப்பாளர் ஒருவரும் இருப்பது அவசியம். ஒரு துணை அமைப்பாளர், கண்டிப்பாக தற்போது கல்லூரியில் பயிலக்கூடிய மாணவராக இருத்தல் அவசியம். இப்பொறுப்புகளில் உள்ள தற்போதைய நிர்வாகிகள், மீண்டும் அப்பொறுப்புகளுக்கு வர விரும்பினால், அவர்களும் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் இப்பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கவும். நியமிக்கப்படவுள்ள நிர்வாகிகள் அனைவரும் கல்லூரி, டிப்ளமோ படிப்பை முடித்தவராகவராகவோ அல்லது தற்போது கல்லூரியில் பயிலக்கூடியவராகவராகவோ இருத்தல் அவசியம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்டக் கழகத்திலோ, மாவட்ட அமைப்பாளரிடமோ, தலைமைக் கழகத்திலோ ஆகஸ்ட் மாதம், 10ம் தேதி மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.