சென்னை: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி. இவர் பேஸ்புக்கில் 3 கணக்குகள் வைத்துள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், நாமக்கல் திமுக ஆகிய பெயர்களில் உள்ள பேஸ்புக் பக்கங்களில் எம்பி., பங்கேற்கும் நிகழ்ச்சிகள், நாடாளுமன்ற மாநிலங்களவையில் தனது செயல்பாடுகள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து வந்தார். இந்நிலையில் அவரது பேஸ்புக் சமூக வலைதள பக்கங்களை, அடையாளம் தெரியாத சிலர், கடந்த 17ம் தேதி முடக்கியுள்ளனர். இதுகுறித்து, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் பொன்.சித்தார்த், நாமக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், போலீசார் வழக்குபதிந்து, விசாரிக்கின்றனர். ராஜேஸ்குமார் எம்பியின் சமூக வலைதள பக்கங்களை மீட்பதற்கான நடவடிக்கைகளில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.