திமுக செய்தி தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்-அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டனர்.
வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் கோரிக்கை மனுக்களையும் பெற்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கில், நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுக் கூட்டம் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் நடந்தது. இதில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய மக்கள் நலன்சார்ந்த திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து திமுக தேர்தல் அறிக்கை இறுதி வடிவம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.