திமுகவினர் குறித்து அநாகரீக பேச்சு பாஜ எம்எல்ஏ வானதி மீது 40க்கும் மேற்பட்ட புகார்கள்: கைது செய்யப்படுவாரா?

கோவை: திமுகவினர் குறித்து அநாகரீகமாக பேசிய கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது கோவை போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன. கோவை காந்திபுரத்தில் வி.கே.கே.மேனன் சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி பாஜ சார்பில் ஒன்றிய அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பேசினார். அப்போது அவர், திமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் குறித்து அநாகரீகமான முறையில் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ மீது திமுகவினர் ெதாடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி டிஎஸ்பி பிருந்தாவிடம் திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: வானதி சீனிவாசன் எம்எல்ஏ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்களையும், வார்டு உறுப்பினர்களையும், தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி இழிவுபடுத்தி உள்ளார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது. அமைதி பூங்காவான தமிழகத்தில் அவருடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருகட்சியினரிடையே வன்மத்தை தூண்டுவதாக உள்ளது. எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

இதேபோல், கோவை பீளமேடு திமுக பகுதி செயலாளர் துரை செந்தமிழ்செல்வன் தலைமையில் பீளமேடு காவல் நிலையத்திலும், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி, பீளமேடு உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திமுக பகுதி செயலாளர்கள் தனித்தனியாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது புகார் அளித்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, தெற்கு மாவட்ட பகுதி, வடக்கு மாவட்டம் சூலூர், வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை சுமார் 40 புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வானதி சீனிவாசனின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. ‘ஒட்டுமொத்தமாக பெண்களை தரக்குறைவாக பேசிய வானதி சீனிவாசனை கைது செய்ய வேண்டும். தேசிய, மாநில மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பெண்கள் மற்றும் மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதால், வானதி சீனிவாசன் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது