கோவை: திமுக – விசிக கூட்டணிகளுக்கு இடையில் எந்த சலசலப்பும் இல்லை என வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியில், பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார். விசிக கூட்டணி இல்லாமல் வட மாவட்டங்களில் திமுக வெல்ல முடியாது, குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் தமிழகத்தில் கூட்டணி அமைய வேண்டும், தமிழக அமைச்சரவையில் விசிக, இடதுசாரிகள், இஸ்லாமிய கட்சிகளுக்கு இடம் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கருத்துக்களை ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக – விசிக கூட்டணியில் எந்தவித உரசலும் இல்லை என்று தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனா கருத்தால் திமுக -விசிக இடையே எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கும் வாய்ப்பில்லை என்று கூறினார். ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு உட்கட்சி விவகாரம் தொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் பதில் அளித்தார். சமூக வலைத்தளங்களில் வெளியான ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்து, விவாதங்களுக்கு வித்திட்டு விட்டது என அவர் கூறினார்.