இக் குழுவினர் கடந்த 5ம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் சிறப்பு அழைப்பாளர்களிடமும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் கருத்துக்களை கேட்டறிந்தனர். தொடர்ந்து பிற்பகலில் திமுகவின் சென்னை வடக்கு, சென்னை வட கிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளைப் பெற்றனர்.
இதில் வணிகர் சங்கங்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவ சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், திமுக நிர்வாகிள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் நேரில் தங்கள் கோரிக்கைகளை அளித்தனர். மேலும் சென்னை மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்ற னர்.