சென்னை: தீபாவளியையொட்டி 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் தீ விபத்திற்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் என்று 95 இடங்களில் தீ விபத்திற்கான சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. 750 படுக்கைகளுடன் 95 மருத்துவமனைகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி தீ விபத்தில் இறப்புகள் இல்லை என்ற நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது’’ என்றார். இந்நிகழ்வில் கே.மோகன் எம்எல்ஏ, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.