சேலம்: தீபாவளி பண்டிகையின்போது சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு சிறப்பு பஸ்கள் பெயரில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் எருமாபாளையம் கிளையின் தடம் எண்7 பஸ் சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டது. அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களிடம் ரூ.57 கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த ஆத்தூரை சேர்ந்த கம்யூனிஸ்ட் நிர்வாகி முருகேசன், கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும், மூன்று மணி நேரத்துக்கு மேல் மெதுவாக பஸ்சை ஓட்டியதாகவும் ஆத்தூர் கிளை மேலாளர் வெங்கடேசனிடம் புகார் செய்தார்.
இதுதொடர்பான விசாரணையில் சேலம்-ஆத்தூர் தடத்தில் 56 கிலோ மீட்டருக்கு ரூ.36 கட்டணம் என குறிப்பிட்டிருந்த நிலையில், கண்டக்டர் செங்கோட்டையன் ரூ.57 வசூலித்தது தெரியவந்தது. இதனால் கண்டக்டர் செங்கோட்டையன் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க மேலாளர் பரிந்துரை செய்தார். இந்நிலையில் செங்கோட்டையனை சஸ்பெண்ட் செய்து சேலம் போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவிட்டார். மேலும் பஸ்சை மெதுவாக ஓட்டியது பற்றி டிரைவர் மாரிமுத்துவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.