பெங்களூர்: தீபாவளிக்கு வீட்டை அலங்கரிக்க மின்சாரம் திருடியதாக குமாரசாமி மீது கர்நாடக அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு கர்நாடகா முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி. குமாரசாமி வீடு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இதுதொடர்பான படங்களை வெளியிட்ட கர்நாடகா காங்கிரஸ் கட்சி எச்.டி.குமாரசாமி மின்சாரம் திருடியதாக குற்றச்சாட்டியது. இந்த குற்றச்சாட்டு குறித்து,’தீபாவளிக்கு எனது வீட்டை மின் விளக்குகளால் அலங்கரிக்குமாறு தனியார் டெக்கரேட்டரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. வீட்டை மின் விளக்குகளால் அலங்கரித்துவிட்டு, அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தி சோதனை செய்தனர்’ என்று எச்.டி.குமாரசாமி விளக்கம் அளித்தார். இருப்பினும் மின்திருட்டு தொடர்பாக குமாரசாமி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு ஜெயநகர் காவல் நிலையத்தில் இந்திய மின்சாரச் சட்டத்தின் கீழ் பெஸ்கோம் நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குமாரசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.