*தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி
பந்தலூர் : டேன்டீ தேயிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் சம்பளம் உயர்வு அரசு அறிவிப்பை இனிப்பு வழங்கி சேரம்பாடி டேன்டீ தொழிலாளர்கள் கொண்டாடினர்.தமிழ்நாடு அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இலங்கையில் இருந்து தாயகம்திரும்பிய மக்களின் மறுவாழ்வு திட்டத்தில் கடந்த 1969-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.
திமுக ஆட்சியின் போதெல்லாம் டேன்டீ தேயிலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கி வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் டேன்டீ தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. சம்பளம் உயர்வும் வழங்கப்படாமல் இருந்து வந்தது அதனால் டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் மன வேதனையில் இருந்து வந்தனர்.
தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில், டேன்டீ தேயிலை தோட்ட தொழிலாளர்கள், 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் சம்பளம் உயர்வு வழங்க வேண்டும் என அரசு மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து டேன்டீ தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று 20 சதவீதம் தீபாவளி போனஸ் மற்றும் ரூ.438 சம்பளம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இதைத்தொடர்ந்து சேரம்பாடி டேன்டீ தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து நேற்று இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு திமுக பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய செயலாளருமான மாங்கோடு ராஜா தலைலை வகித்தார்.
மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார், மாவட்ட பிரதநிதி கணபதி, சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத்தலைவரும் மாவட்ட பிரதநிதியுமான சந்திரபோஸ், ஒன்றிய பொருலாளர் உம்மர், துணை செயலாளர் பாக்கியநாதன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் எஸ்விபி ராஜா, முத்துக்குமார், எல்பிஎப் நிர்வாகிகள் சந்திரன், அழகுராஜ், மோகன் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.