அதில் ஒரு பக்கம் சென்னை -கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கரிமேடு என்ற பகுதியில் 50 குடியிருப்புவாசிகள் சில ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக சில மாதங்களுக்கு முன்பு காலி செய்ய வேண்டுமென ரயில்வே துறை நோட்டீஸ் கொடுத்தது. அதற்கான பணியும் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் ஓரிரு நாளில் போலீஸ் பாதுகாப்புடன் இந்த பகுதி குடியிருப்புகளை அகற்றப்போவதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி கரிமேடு கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குடியிருப்பு வீட்டை அகற்றக்கூடாது என கூறி வட்டாட்சியர் அலுவலகத்தை ஒருங்கிணைப்பாளர் சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் முற்றுகையிட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மாற்று இடம் தந்த பின்னரே வீடுகளை அகற்ற வேண்டும் என கோரி 6 மாத கால அவகாசம் கேட்டனர். மேலும், மாற்று இடம் கேட்டு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து 6 மாதம் ஆகியும் மாற்று இடம் வருவாய் துறையினர் வழங்கவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் வீடுகளை காலி செய்வது எங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும். எங்களுக்கு அரசு மாற்று இடம் வழங்கியதும் நாங்களாகவே வீடுகளை காலி செய்து வெளியேறுகிறோம், அதுவரை தற்போது குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது என கோஷமிட்டனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தியிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றார். அவர்களிடம் வட்டாட்சியர் பிரீத்தி புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள வண்டி பாட்டை வகைப்பாட்டு நிலத்தை ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு பின் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிரித்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதுடன் தற்போது குடியிருப்புகளை அகற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரிமேடு பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.