கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி புகைப்படத்துடன், ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக, நோட்டீஸ் ஆங்காங்கே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஓசூர் தாசில்தார் அலுவலகம் சாலையில் உள்ள சி.சி.நகரில் உள்ள டைலர் கடையில், பாஜ நிர்வாகி ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியதால், அங்கு ஏராளமான பெண்கள் கடன் உதவிக்கு விண்ணப்பம் செய்ய திரண்டனர்.
அங்கு விண்ணப்பம் செய்ய ரூ.150 முதல் ரூ.200 வரை வசூல் செய்யப்பட்டதாக தெரிகிறது. அதற்கு உத்திரவாதமாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தேர்தல் அதிகாரிகள் கடன் வழங்க வைக்கப்பட்டிருந்த டோக்கன்கள் மற்றும் கணினிகளை பறிமுதல் செய்தார். மேலும் அங்கு தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்து, டோக்கன் வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.