பெங்களூரு: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நடன இயக்குநர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஜானி. இவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பலாத்காரம் செய்தார் என புகார் கூறினார். இந்த புகாரின் பேரில் ஜானி மாஸ்டர் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தெலுங்கு பிலிம் சேம்பரும் குழு ஒன்றை அமைத்து இது தொடர்பாக விசாரணையை துவக்கியது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோல் ஜானி மாஸ்டர் மீது புகார் கூறப்பட்டது.
அவர் கைதும் செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது மீண்டும் புகார் எழுந்துள்ளது. புகார் கூறிய அந்த பெண், 2019ம் ஆண்டிலேயே ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. மைனர் பெண்ணை எப்படி பணியில் அமர்த்தப்பட்டார் என்ற ரீதியிலும் விசாரணை நடப்பதாக பிலிம்சேம்பர் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் தெலுங்கு படங்களில் பணியாற்ற ஜானி மாஸ்டருக்கு தெலுங்கு நடன இயக்குனர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. இதனிடையே கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை நேற்று காலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் உப்பரப்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இயக்குநர் ஜானிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.