‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்..உங்கள் உழைப்பு உங்களுக்கு’.. இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடிய தேசிய விருதுகளை ஒப்படைத்த கொள்ளையர்கள்!!

மதுரை: திரைப்பட இயக்குனர் மணிகண்டன் வீட்டில் திருடிய பொருட்களை கொள்ளையர்கள் மீண்டும் அவர் வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன். இவர் காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியவர். இதுவரை இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். மணிகண்டன் குடும்பத்தினருடன் சென்னையில் வசிப்பதால், உசிலம்பட்டி வீட்டுக்கு அவ்வப்போது மட்டும் வந்து செல்வது வழக்கம்.

மணிகண்டன் வீடு பூட்டி இருப்பதை அறிந்த மார்ம நபர்கள் கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக ஒன்றிய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்கள், ரூ.1 லட்சம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இயக்குநர் மணிகண்டன் வீட்டில் பணம், நகை மற்றும் வெள்ளி பதக்கங்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள், மணிகண்டனின் வீட்டு வாசலில் ஒரு பாலிதீன் பையில், தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் திரும்ப வைத்துச் சென்றுள்ளனர். அத்துடன் ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளனர். அதில் ‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு’ என்று எழுதி வைத்துள்ளனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு