திண்டிவனம் அருகே சவுக்கு கட்டை ஏற்றிச் சென்ற லாரி மீது பைக் மோதி 2 வாலிபர்கள் பரிதாப பலி

*ஒருவருக்கு தீவிர சிகிச்சை சாலை மறியல்-பரபரப்பு

வானூர் : திண்டிவனம் அருகே சவுக்கு கட்டை ஏற்றிச் சென்ற லாரி மீது பைக் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். படுகாயம் அடைந்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வானூர் தாலுகா தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சபரிநாதன் (26), விக்கி (25), விஜயதாஸ் (26). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை புல்லட்டில் புதுச்சேரிக்கு சென்று விட்டு தைலாபுரத்துக்கு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது தைலாபுரம் அருகே காட்ராம்பாக்கம் கிராமத்தில் உள்ள எடை மேடைக்கு சவுக்கு கட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி அங்கு எடை போட்டுக்கொண்டு, பின்னர் திண்டிவனம் நோக்கி சாலையை கடந்துள்ளது. அப்போது சபரிநாதன் உள்ளிட்ட 3 பேர் சென்ற பைக் எதிர்பாராதவிதமாக அந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை மருத்துவர்கள், சபரிநாதன் மற்றும் விக்கி ஆகிய இருவரும் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விஜயதாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணையில், சபரிநாதன் மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் சிறு கம்பெனி வைத்து தொழில் செய்து வருவதும், விக்கி வானூர் தாலுகா நெசல் கிராமத்தில் இண்டர்நெட் சென்டர் வைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்து குறித்து தகவலறிந்த தைலாபுரம் கிராமத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விபத்தில் இறந்த வாலிபர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் விபத்து நடந்த பகுதியில் திடீரென திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டக்குப்பம் டிஎஸ்பி சுனில், கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், விபத்து நடந்த பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு போலீசார், அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் தைலாபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு