திண்டுக்கல் அருகே வெடிவிபத்தில் இறந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வெடிவிபத்தில் இறந்த கண்ணன், முனீஸ்வரன் ஆகியோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். “வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில் நேற்று (24.08.2024) பிற்பகல் சுமார் 03.30 மணியளவில் வெடிமருந்து தயாரிக்கும் பணியின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல், முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்த கண்ணன் (எ) சின்னன் (வயது 42) த/பெ. குருசாமி மற்றும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (எ) மாசா (வயது 30) த/பெ.மாரிமுத்து ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts

நாகர்கோவில்: நாளை, செப்.15-ல் போக்குவரத்து மாற்றம்

சிபிஐ என்று கூறி தமிழ்நாடு, கேரளாவில் பல கோடி மோசடி: வாலிபர் கைது

மதுபோதையில் நண்பர் தலையில் கல்லை போட்டு கொலை: 2 வாலிபர்கள் கைது