திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர். அதன்படி, ‘பிறப்பொக்கும் எல்லா உயரிக்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவதும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்து கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாக கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதியேற்கிறேன்’ என வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, தனித்துணை ஆட்சியர் கங்காதேவி, துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜேஸ்வரி சுவி, கலால் உதவி ஆணையாளர் பால்பாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் செல்வம், முருகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.