தீமிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயம்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

பெரம்பூர்: தீமிதி திருவிழாவின்போது அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண் படுகாயமடைந்தார். அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுதித்தனர். வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஸ்ரீ தீப்பாஞ்சம்மன் கோயிலில் நேற்று முன்தினம் 48வது ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், வியாசர்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சத்தியமூர்த்தி நகர் தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்புப்படை குழுவினர் அக்னி குண்டத்தை சுற்றி தயார் நிலையில் இருந்தனர். தீமிதி திருவிழா நடந்து கொண்டிருந்த நிலையில், வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பானு (45) என்பவர், தீயில் இறங்கியவுடன் கால் தடுமாறி அக்னி குண்டத்தில் விழுந்தார். இதில் அவருக்கு கால் மற்றும் கை ஆகிய இடங்களில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. அருகில் நின்று கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி குண்டத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்