திருவள்ளூர்: கடம்பத்தூரில், நடைப்பெற்ற தீமிதி திருவிழாவில், பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 21ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 22ம் தேதி பீமன் வீதியுலாவும், 23ம் தேதி அர்ஜுனன் திரௌபதி திருக்கல்யாணமும், 24ம் தேதி கருட வாகனத்தில் கிருஷ்ணமூர்த்தி வீதியுலாவும், 25ம் தேதி திரௌபதி அம்மன் வீதியுலாவின்போது சிலம்புடன் கரகம் வருதல் நிகழ்ச்சியும், 26ம் தேதி அர்ஜுனன் தவநிலை காட்சி வீதியுலாவும், 27ம் தேதி சிவசக்தி வீதியுலாவும், மாலையில் தருமராஜா வீதியுலாவும், 28ம் தேதி அர்ஜுனன் மற்றும் உத்திரகுமாரன் வீதியுலாவும், 29ம் தேதி சிம்ம வாகனத்தில் மகாசக்தி ரூபம் அம்மன் வீதியுலாவும் நடந்தது.
நேற்று முன்தினம் திரௌபதி அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா மாலை 6 மணிக்கு வெகு விமர்சையாக நடந்தது. இதில் 400 பேர் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். விழாவில் திமுக மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ, திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, டாக்டர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ராஜவேல் மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.