கோவையில் நாடாளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்த தொகுதியில் திமுக, அதிமுக, பாஜ இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜ சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இங்கு பாஜவினர் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக புகார்கள் குவிகிறது. இந்தநிலையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் மொபைல் எண்களுக்கு கடந்த சில நாட்களாக போன் மூலம் பாஜ சார்பில் அழைத்து பேசி வருகின்றனர். அவ்வாறு பேசும்போது, ‘‘உங்கள் ஓட்டு யாருக்கு?’’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் உங்கள் ஓட்டு அண்ணாமலைக்கு என்றால் எண் 5-ஐ அழுத்தவும், அதிமுக என்றால் எண் 6-ஐ அழுத்தவும், திமுக என்றால் எண் 7-ஐ அழுத்தவும் என கேட்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் சிலரும் தங்களின் விருப்பமான வேட்பாளரை தேர்வு செய்து வருகின்றனர். சிலர் இணைப்பை துண்டித்து விடுகின்றனர். ஆனாலும் சிலரிடம் அண்ணாமலைக்குதான் வாக்களிக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தும் வகையிலும் பேசி வருகின்றனர்.
மேலும், சில ஆசை வார்த்தைகளை கூறி வாக்காளர்களின் வாக்குகளை அபகரிக்கவும் பாஜவினர் திட்டமிட்டு இதுபோன்ற செயல்பாடுகளில் இறங்கி உள்ளனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜவிற்கு வாக்கு செலுத்துமாறு கோவை வாக்களர்களுக்கு வந்த செல்போன் எண்களை எக்ஸ் தளத்தில் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளை மீறி இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் பாஜவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜவினர் தில்லு முல்லு செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் அதிகளவு வேறுபாடு இருந்தது. அதாவது அந்த தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருந்தன.
குறிப்பாக வட மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் அதிகளவில் தில்லு முல்லு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில் கோவையில் வாக்காளர்களின் மனநிலையை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லு முல்லு செய்ய பாஜவினர் திட்டமிட்டுள்ளனரா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் நிலையில், யாருக்கு ஓட்டு? என கேட்பது நடத்தை விதிமீறல் ஆகும்.
இதுதொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. இந்த புகாரை அடுத்து போலீசார் மூலம் பொதுமக்களிடம் போன் மூலமாக சர்வே எடுப்பது தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர். நடத்தை விதிகள் மீறி அண்ணாமலை ஆதரவாக பிரசாரம் செய்யப்பட்டதால் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
* பாஜவினருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்களர்களுக்கு பாஜ சார்பில் பேசிய தொலைபேசி எண்களையும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரியும் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவுகள்.