சென்னை: வீடியோ காலில் பேசும் பழக்கம் அதிகரித்து வரும் இன்றைய தொழில்நுட்ப காலத்தில் அதன் வழியே அப்பாவிகளை நிர்வாணமாக சித்தரித்து நடக்கும் மோசடிகள் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. டிஜிட்டல் மோகம் அதிகரித்து விட்ட இந்த காலத்தில் அதில் இருக்கும் நன்மைகளுக்கு இடையே மோசடி கும்பல்களின் குற்றச்செயல்களும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வீடியோ கால் வசதி மூலம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் குறித்து சென்னை சைபர் க்ரைம் காவல்துறைக்கு குவிந்துள்ள புகார்கள் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. ஒருவருக்கு அறிமுகம் இல்லாத அல்லது முகம் தெரியாத நபரிடம் இருந்து வீடியோ கால் வந்தாலும் அதனை Attend செய்தால் சில வினாடிகள் பேசும் நிலை உருவாகும்.
இதனை பதிவு செய்யும் அந்த முகம் தெரியாத நபர் பின்னர் விடியோவை நிர்வாணமாக சித்தரித்து எதிர் தரப்பில் பேசியவரிடம் பணம் கேட்டு மிரட்டும் செயலில் ஈடுப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதுவரை 12 பேர் புகார் அளித்திருக்கும் நிலையில் அந்த மோசடி கும்பல் குறித்து விசாரணையில் தீவிரமாக இறங்கியுள்ளது சைபர் க்ரைம். எனவே முகம் தெரியாமல் அல்லது முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வீடியோ கால்கள் வந்தால் அதனை கவனமுடன் கையாள எச்சரிக்கை விடுத்துள்ளனர்.