Friday, June 28, 2024
Home » திங்கள்நகர் அருகே கடன் தவணை வசூலிக்க வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நிதி நிறுவன ஊழியர்கள் தகராறு

திங்கள்நகர் அருகே கடன் தவணை வசூலிக்க வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நிதி நிறுவன ஊழியர்கள் தகராறு

by Lakshmipathi

*ஊர்மக்கள் திரண்டதால் தப்பியோட்டம்: நடவடிக்கை எடுக்க ஏ.எஸ்.பி.யிடம் புகார்

குளச்சல் : குமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே மாங்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு ராஜன். சொந்தமாக டெக்கரேசன் தொழில் செய்து வரும் இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் தனியார் நிதி நிறுவன கிளை ஒன்றில் தொழில் கடன் ரூ.15 லட்சம் பெற்றிருந்தார். இதற்கு அவர் மாதந்தோறும் ரூ.43 ஆயிரம் தவணை தொகை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த மாத தவணை தொகையை ஜெரால்டு ராஜன் ஊரில் இல்லாததால் செலுத்த முடியாமல் காலதாமதம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 22ம் தேதி மாலை ஜெரால்டு ராஜனின் மனைவி அனில் டெல்பின் வீட்டில் தனியாக இருந்த போது 7 பேர் கொண்ட நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்குள் புகுந்து அனில் டெல்பினை தரக்குறைவாக தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டுக்குள் சப்தம் கேட்கவே அங்கு ஊர் மக்கள் திரண்டனர். ஊர் மக்கள் திரண்டு வந்ததை பார்த்த நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை விட்டு வெளியேறி இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து அனில் டெல்பின் வீட்டிற்குள் புகுந்த நபர்களின் வீடியோ ஆதாரத்துடன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவம் நடந்து 3 நாட்களாகியும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அனில் டெல்பின் நேற்று குளச்சல் ஏ.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மாங்குழியில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தகராறு செய்தபோது ஊர்மக்கள் அவர்களை துரத்தும் சி.சி.டி.வி கேமரா காட்சி தற்போது சமூக இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

19 + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi