ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே, தனுஷ்கோடியில் வலசை வரும் பறவைகள், அலையாத்திக் காடுகளை கண்டுகளிக்கும் வகையில், மரப்பாலத்துடன் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, தனுஷ்கோடி சாலையில் முகுந்தராயர் சத்திரம் அமைந்துள்ளது. இதன் வடக்குப் பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகள், பறவைகளை கண்டுகளிக்கும் வகையில் 2 தொலை நோக்கிகளுடன் மரப்பாலத்துடன் கூடிய கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் டாக்டர் சுதான்சூ தலைமை வகித்தார். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘இப்பகுதியில் உள்ள அலையாத்திக் காடுகள், வலசை வரும் பறவைகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் 2 தொலை நோக்கிகளுடன் இந்த மரப்பாலத்துடன் கூடிய கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் அலையாத்திக் காடுகள் குறித்தும் வலசை வரும் பறவைகள் குறித்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்படும்’ என்றனர்.