மும்பை: மகாராஷ்டிராவில் தங்கர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மகாராஷ்டிரா பேரவை துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் உள்ளிட்ட எஸ்டி பிரிவை சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஜிர்வால் மற்றும் பிற பழங்குடியின எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திக்க பல முறை முயற்சித்தனர். அவர்களுக்கு சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள், இந்த விவகாரத்தில் தீர்வு காண போராட்டம் நடத்த முடிவு செய்தனர். நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் பழங்குடியின தலைவர்கள், தலைமை செயலகமான மந்த்ராலயாவின் மாடிக்கு நேற்று மதியம் சென்றனர். அங்கு 7வது மாடியில் இருந்து, 3வது மாடியில் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு வலையில் குதித்தனர்.
மந்த்ராலயாவின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சிகள் நடந்ததால், இதனை தடுக்க 2018ம் ஆண்டில் பாதுகாப்பு வலை நிறுவப்பட்டது. இந்த வலையில் நர்ஹரி ஜிர்வால் மற்றும் அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ கிரண் லஹமதே மற்றும் பாஜவின் பழங்குடியினத்தை சேர்ந்த எம்.பி ஹேமந்த் சவாரா ஆகியோர் விழுந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. துணை சபாநாயகர் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரை வலையில் இருந்து போலீசார் மீட்டனர்.