திருப்பரங்குன்றம்: பவுர்ணமியையொட்டி திருப்பரங்குன்றத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமானின் முதல்படை வீடான சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதன்படி நேற்று பவுர்ணமி தினம் என்பதால் அதிகாலை முதலே கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.
மாலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலாயை சுற்றிவந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கிரிவல பாதையில் பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. அதேநேரம், மதுரை புட்டுத் திருவிழாவில் கலந்துகொண்ட பிறகு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பூபல்லக்கில் நேற்றிரவு வந்தடைந்தார். இந்த காட்சியை காணவும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.