பெங்களூரு: ஹாசன் தொகுதி மஜத எம்பி பிரஜ்வல் ரேவண்ணா ரூ.23 கோடிக்கும் அதிக சொத்து விபரத்தை பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கவில்லை என்பதால் அவரின் எம்பி பதவியை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்பி., பிரஜ்வல் ரேவண்ணா 2019ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். ஹாசன் தொகுதியில் வழக்கமாக முன்னாள் பிரதமர் தேவகவுடா போட்டியிடுவார். ஆனால்,. கடந்த தேர்தலில் அவரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு விட்டுக்கொடுத்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எச்டி ரேவண்ணாவின் மகனும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றதை ரத்து செய்ய வேண்டும் என்று எம்எல்ஏ மஞ்சு மற்றும் தேவராஜ்கவுடா வழக்கு தொடர்ந்தனர். இதற்கு ஆதாரமாக ரேவண்ணா, தேர்தலின் போது தாக்கல் செய்த பதவி பிரமாண பத்திரத்தில்ரூ.23 கோடிக்கும் அதிமாக சொத்து விவரங்களை மறைத்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான தீர்ப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று வழங்கியது. அதில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான புகார் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது, அவரது எம்.பி பதவி ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.