Wednesday, October 9, 2024
Home » தேவதானப்பட்டி அருகே வேட்டுவன்குளம் கண்மாய் உபரி நீருக்கு புதிய வழித்தடம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

தேவதானப்பட்டி அருகே வேட்டுவன்குளம் கண்மாய் உபரி நீருக்கு புதிய வழித்தடம் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

by MuthuKumar

தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து வெளியேறும் உபரி நீருக்கு புதிய வழித்தடம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் வராகநதி ஆறு, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. இந்த வராகநதி ஆற்றில் வடுகபட்டியில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் வடுகபட்டி, மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கு வாய்க்கால் பாசனமும், நல்லகருப்பன்பட்டி நாரணன்குளம் கண்மாய், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாய், பொம்மிநாயக்கன்பட்டி கண்மாய், குள்ளப்புரம் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது. இது தவிர தேவதானப்பட்டி முருகமலையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ஓடைகள் ஆங்காங்கே கண்மாய்களில் சென்று, அங்கிருந்து உபரி நீராக வராகநதி ஆற்றில் கலக்கிறது.

வராகநதி ஆற்றுப்பாசனம், வைகை அணை துணைவாய்க்கால் பாசனம் என ஏராளமான பாசன வசதிகள் இருந்தும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலங்களாக உள்ளன. இந்த பகுதியில் ஆண்டுதோறும் வெறும் மானாவாரி பயிர்களை மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகளவு மழை பெய்து, வராகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான கனஅடி நீர் வீணாகி வருகிறது.

தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டிக்கு அடுத்து அ.வாடிப்பட்டி உள்ளது. இந்த ஊராட்சியில் இருந்து வடக்கு பக்கம் பெரும்பாலான இடங்கள் மானாவாரி நிலங்களாக உள்ளது. அ.வாடிப்பட்டி, வேலாயுதபுரம், அ.புதூர், ஐந்து ஏக்கர் காலனி, ஆகிய இடங்கள் உள்ளன. இந்த பகுதியில் பருவமழையை நம்பி ஆங்காங்கே சிறு சிறு குளங்கள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீரினால் இந்த குளங்கள், தடுப்பணைகள் நிரம்புகின்றன. அவற்றை வைத்து ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நீண்ட நாள் கனவு:
மானாவாரி நிலங்களை, செழுமையாக்க வேண்டும் என்றால், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து வடக்கு பக்கம் வண்ணான் கரட்டை ஒட்டியே புதிய வாய்க்கால் வழித்தடம் அமைக்க வேண்டும். இந்த வாய்க்கால் அ.வாடிப்பட்டி வரை கொண்டு செல்ல வேண்டும். இந்த வாய்க்காலில் இருந்து ஆங்காங்கே துணை வாய்க்கால்கள் அமைக்கவேண்டும். சிறு சிறு குளங்களுக்கு நீர்வழித்தடம் அமைக்கவேண்டும் என்பது இந்த பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது.

5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்:
இது குறித்து, விவசாயி பொம்முராஜ் கூறுகையில், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து பருவமழை காலங்களில் பல ஆயிரம் கன அடி நீர் நம் கண் முன்னே வீணாக செல்கிறது. பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் தரிசு நிலங்கள் இருப்பது இயற்கை ஆகும். ஆனால் நமது மாவட்டத்தில் செழுமையான இடங்களில் இப்படி ஒரு வறட்சி பகுதி என்பது கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து பருவமழை காலங்களில் மட்டும் வீணாக செல்லும் உபரி நீரை மட்டும் இந்த வழித்தடத்தில் திருப்பினால் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும்.

இந்த உபரி நீரால் பல ஆயிரம் விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரம் உயரும். தற்போது இந்த அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் மூலம் கள ஆய்வு செய்து பெரும்பாலும் நிறைவேற்றி வருகிறது. அதேபோன்று இந்த கோரிக்கையையும் நிறைவேற்றினால் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்பட்டு வாழ்க்கை தரம் உயரும். ஆகையால் அதிகாரிகள் கள ஆய்வு செய்து ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் இருந்து அ.வாடிப்பட்டி பகுதிக்கு புதிய நீர் வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

18 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi