புதுடெல்லி: கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஒன்றிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் நகலை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், காஸ் சிலிண்டர்கள் முறையான வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக எரிவாயு இணைப்புகளை வைத்துள்ளவர்களின் தகவல்கள் திரட்டுவதை அரசு கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தும் எல்பிஜி காஸ் சிலிண்டர்களை வர்த்தக நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றனர். இது போன்ற முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஆதார் அடிப்படையிலான இ- கேஒய்சி விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் சேகரிக்கின்றன. வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரிக்கம் திட்டம் கடந்த 8 மாதங்களாக நடந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.