வேலூர் : வேலூர் அடுத்த ஜார்தான்கொல்லை மலையில் 1,000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர். வேலூர் அடுத்த ஜார்தான்கொல்லை மலையில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக எஸ்பி மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சோதனை நடத்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஜார்தான்கொல்லை மலை கிராமத்தில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக், இரும்பு என 6 பேரல்களில் 1,500 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவற்றை கைப்பற்றி தரையில் கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த வெல்லம், பிளாஸ்டிக், இரும்பு பேரல்கள் மற்றும் அடுப்புகளை உடைத்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.