சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் வளி மண்டல காற்று சுழற்சி உருவாகியுள்ளது. அது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேத்தியாதோப்பில் 170மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடலூர், கொள்ளிடம், ஸ்ரீமுஷ்ணம் 110 மி.மீ, புவனகிரி, காட்டுமன்னார் கோயில், வேப்பூர் 90மி.மீ, திருநெல்வேலி, பெரம்பலூர், பரங்கிப்பேட்டை 80மி.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. 22 மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்தது. இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகும் வாய்ப்புள்ளது. அது மேலும் வலுவடைந்து 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. கிழக்கு காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கனமழை, கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.