சென்னை: 600 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. 2023- 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்தார். அப்போது போக்குவரத்து தொடர்பான திட்டங்களையும், நிதி ஒதுக்கீட்டு விவரங்களையும் அவர் அறிவித்திருந்தார்.
அதில் தரமான வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக, பேருந்துகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கான தேவை எழுந்துள்ளது. ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யவும், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும், இந்த வரவு செலவு திட்டத்தில் 500 கோடி ரூபாய் நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 600 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் 150 முழுமையான தாழ்த்தள பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 600 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.