நெல்லை: நெல்லை நாஞ்சான்குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி முருகதாஸ் மகன் மாரியப்பன் (23). இவர் சென்னை தண்டையார்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். கூடவே தடகளப்போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். அதனால் தீயணைப்பு வீரர்களுக்கான உலக தடகள போட்டிகளுக்காக சொந்த ஊரில் மாரியப்பன் தன்னை தயார்படுத்திக் கொள்ள, தீயணைப்புத்துறையின் இயக்குனர் ஆபாஷ் குமார், உதவி இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் அனுமதி அளித்தனர். அதற்கேற்ப பாளையங்கோட்டைக்கு இடமாறுதலும் வழங்கினர்.
அங்கு பயிற்சி பெற்று வந்த மாரியப்பன், சர்வதேச அளவில் தீயணைப்பு துறை வீரர்களுக்கான தடகள போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றார். அதைத்தொடர்ந்து டென்மார்க் நாட்டில் நடக்கும் தீயணைப்பு வீரர்களுக்கான உலகளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ள மாரியப்பன் 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஆகிய ஓட்டப் பந்தயங்களிலும் முதலிடம் பிடித்து 4 தங்க பதக்கங்களை வென்றார். மாரியப்பன் சாதனையை, நெல்லை மாவட்ட தீயணைப்புத்துறையினர் நெல்லையில் நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.