கர்நாடகாவில் டெங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருப்பூர், தருமபுரியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் டெங்கு சிறப்பு வார்டுகள் அமைக்கவும் எல்லையோர மருத்துவமனைகளில் காய்ச்சலோடு வருபவர்களின் விவரங்களை அறியவும் தமிழக மருத்துவத்துறை ஆணையிட்டுள்ளது. அத்துடன் சிகிச்சைபெறும் நோயாளிகளின் விவரம், மருந்து கையிருப்பு விவரங்களை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை உத்தரவுகளின்படி, கர்நாடக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு பாதிப்பை கண்காணித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும் டெங்கு பாதிப்பை எதிர்கொள்ள சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு 40 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.