கோடா: ஜார்க்கண்டின் கோடா தொகுதியில் நேற்று நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது, “நாடாளுமன்றத்தில் இதற்கு முன் சட்டங்களை இயற்றுவதற்காக விவாதங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இப்போது எதிர்க்கட்சியினரை தாக்குவதற்காக பாஜ விவாதங்களை நடத்துகிறது. கடந்த 10 ஆண்டுகால பாஜ ஆட்சியில் நாடாளுமன்றம், நீதித்துறை, ஜனநாயகம் போன்ற அனைத்தும் பலவீனமாகி விட்டன. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி விடுவார்கள். இடஒதுக்கீட்டை குறைப்பார்கள். பழங்குடியினத்தை சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை பொய் வழக்குகளில் மோடி அரசு சிறையில் அடைத்துள்ளது. காங்கிரசின் கொள்கைகள் பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது” என்றார்.