உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு செல்லும் வழியில் உள்ள சோதனைச்சாவடியில் கூடுதலாக வன ஊழியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலையில் இருந்து 9/6 செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலம் மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் ஏராளமான சரக்கு வானங்கள், சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட இந்த மலைவழிப் பாதையில் வனத்துறையின் செக்போஸ்ட் உள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் கனரக வாகனங்களுக்கு ரூ.100ம், சுற்றுலா வாகனங்களுக்கு ரூ.50ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் தமிழகம் வழியே கஞ்சா, சந்தனமரம், எரிசாராயம், ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறதா? என வாகனங்களை முற்றிலும் பரிசோதித்த பின்னரே வாகனங்கள் சோதனைச்சாவடியை கடந்து செல்ல முடியும்.
தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கேரளாவை நோக்கி சுற்றுலா வாகனங்களில் பயணம் செய்கின்றனர். வனத்துறை செக்போஸ்டில் இருவர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய முடியவில்லை. எனவே இங்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.