சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்டா குறுவை சாகுபடிக்கு கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறந்துவிடாததால் பயிரிடப்பட்ட குறுவை பயிர்கள் கருகின. குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யாததால், கருகிய மற்றும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு பெற முடியவில்லை. இந்த ஆண்டு ஜூன் 12ல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாத நிலையில், நீரின்றி, குறுவை சாகுபடி செய்ய இயலாத பகுதிகளில் உள்ள பாசன பரப்பு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000ஐ நிவாரணமாக வழங்க வேண்டும். குறுவை சாகுபடி செய்து, நீரின்றி பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிர்க் காப்பீடு நிவாரணம் பெற்று தரவேண்டும். குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படாததால், வேளாண் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் தொழிலாளர்களுக்கு குறுவை பயிர் காலத்திற்கு குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதத்திற்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியால் விவசாயிகளின் உப தொழிலான கால்நடை வளர்ப்பை தொடர்ந்து செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தீவனங்களை விலையில்லாமல் அரசு வழங்க வேண்டும்.