புதுடெல்லி:அமலாக்கத்துறை அனுப்பிய 5 சம்மனை நிராகரித்த விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், இதில் ஆஜராகாமல் அவர் தொடர்ந்து தவிர்த்து வந்தார். அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானது. அரசியல் உள்நோக்கம் கொண்டது என அமலாக்கத்துறைக்கு எழுதிய கடிதத்தில் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அவருக்கு 5வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதையடுத்து டெல்லியில் உள்ள கூடுதல் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் அமலாக்கத்துறை புகார் அளித்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த கூடுதல் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் திவ்யா மல்கோத்ரா, இந்த வழக்கு தொடர்பாக வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவு பற்றி, ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜாஸ்மின் ஷாவிடம் நேற்று கேட்ட போது,‘‘ இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த உத்தரவை ஆராய்ந்து வருகிறோம். இனி சட்டவிதிகளின்படி உரிய நடவடிக்கைகள் எடுப்போம்’’ என்றார்.