சென்னை: டெல்லியில் நடைபெறும் நகர்ப்புற கண்காட்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கண்காட்சி அரங்கை ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திறந்து வைத்தார்.
டெல்லியில் நடைபெற்று வரும் நகர்ப்புற நகர்வு இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி என்பது இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த மாநாடு மற்றும் கண்காட்சி நகர்ப்புற போக்குவரத்துடன் தொடர்புடைய சிக்கல்களை தீர்க்க மாநில மற்றும் நகர்ப்புற அளவில் திறன்களை உருவாக்குவதற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது. நிலையான போக்குவரத்து அமைப்புகளை உருவாக்குவதே இம்மாநாட்டின் நோக்கம். சிறந்த நகர்ப்புற போக்குவரத்து நடைமுறைகளுடன் புதுப்பித்த நிலையை உருவாக்குவதில் முக்கிய முடிவெடுப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரதிநிதிகள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், கட்டுமானம், தொழில்நுட்ப சேவை புரிவோர்கள், போக்குவரத்தில் உள்ள மற்ற பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை இந்த மாநாடு உருவாக்குகிறது. நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துதல் இதிலுள்ள பிரச்னைகளை தீர்வுகாண நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும் ஒரு மன்றமாகும்.
மேலும், சிறந்த கண்காட்சியாளர்கள் விருதுக்காக நடுவர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்டு சிறந்த நகர்ப்புற போக்குவரத்துக்கான விருது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றது. நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் லிவிங்ஸ்டோன் எலியாசர், ராஜேந்திரன், ஆண்டோ ஜோஸ், வெங்கடேஷ் காசி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை இயக்குநரும், மக்கள் தொடர்பு அலுவலருமான கிரிராஜன், மேலாளர் நிவேதிதா, துணை மேலாளர் ஸ்ருதி, அர்ச்சனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.