புதுடெல்லி: டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மேற்கண்ட சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தொடர்ந்த வழக்குக்கு எதிராக எம்.எல்.சி கவிதா டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,\\” சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா நேற்று வழங்கிய தீர்ப்பில்,\\” சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால், கவிதாவுக்கு இந்த விவகாரத்தில் எந்தவித நிவாரணமும் வழங்க முடியாது என தெரிவித்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.