புதுடெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 175 படகுகளையும், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ மற்றும் தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் இருந்து பல்வேறு மீனவர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், சுதா, விளவங்காடு எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் அமைப்பினர் நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்தின் உள்ளே இருக்கும் காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்கள்.
அப்போது தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தியிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மீனவர்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று ராகுல் காந்தி உறுதி அளித்தார்.