மத்தியப்பிரதேச மாநிலம், சிஹோர் மாவட்டத்தில் உள்ள புத்னி சட்டமன்ற தொகுதியின் பெருன்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், ஒன்றிய விவசாயத்துறை அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகானின் மகன் கார்த்திகேயா சிங் பேசியதாவது, ‘‘எங்களது தலைவர் சவுகான் முதல்வராக பிரபலமாக இருந்தார். ஆனால் அவர் தற்போது முதல்வராக இல்லாதபோது ஏன் பிரபலமடைந்தார் என்று தெரியவில்லை. இப்போது எங்களது தலைவர் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பிறகு ஒட்டுமொத்த டெல்லியும் அவர் முன் தலைவணங்குகிறது. அவரை அங்கீகரிக்கின்றனர். மதிக்கின்றனர் ” என்றார். தற்போது அவரது மகன் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில்,’டெல்லி பயப்படுவதாக சிவராஜ்சிங்கின் இளவரசர் கூறுகிறார். இது 100 சதவீத உண்மை. ஏனெனில், நாடும் பயந்துபோன சர்வாதிகாரியை கவனமாக கவனித்து வருகிறது. கட்சிக்குள் கருத்து வேறுபாடு, பெரிய தலைவர்களின் கிளர்ச்சி, கூட்டணி நிர்வாகம், அரசிற்கு ஆதரவு குறைவது போன்றவற்றால் நாற்காலியின் கால்கள் அசைந்து விடுமோ என்ற பயம் அவர்களுக்கு உள்ளது’ என்று கூறினார்.