நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லி நோக்கி ரயில், பஸ் மூலமாக வருமாறு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் மீண்டும் தொடங்கியதைத் தொடர்ந்து டெல்லி எல்லைகளில் மீண்டும் பாதுகாப்பு நேற்று பலப்படுத்தப்பட்டது. டெல்லி-அரியானாவின் சிங்கு எல்லையிலும், டெல்லி-நொய்டா எல்லையிலும் பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். எல்லைகள் மற்றும் நகரின் பிற பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து சாலைகளில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.திக்ரி, சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. ரயில்கள், பஸ் போன்ற பொதுப் போக்குவரத்தில் விவசாயிகள் வருவார்கள் என்பதால் ரயில், மெட்ரோ நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் கூடுதல் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியிருப்பதால் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாங்கள் எந்த எல்லையையும் அல்லது சாலையயும் மூடவில்லை. தொடர்ந்து 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகிறோம். டெல்லியில் ஏற்கனவே 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு எங்கும் எந்தக் கூட்டத்தையும் கூட்ட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சட்டத்தை மீறவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’ என்றனர். இதற்கான தீவிர பாதுகாப்பு, சோதனை காரணமாக சிங்கு உள்ளிட்ட எல்லைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே, விவசாயிகள் வரும் 10ம் தேதி நாடு தழுவிய 4 மணி நேர ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.