டெல்லி: டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் அதிவிரைவு ரயிலின் மேற்கூரையில் இருந்து நீர் ஒழுகியதால் பயணிகள் அவதியடைந்தனர். அண்மையில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற வந்தே பாரத் ரயில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் சொட்ட சொட்ட விழுந்தது. இதனை ரயிலில் பயணித்த பயணிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வடக்கு ரயில்வேயின் அதிகாரபூர்வ எக்ஸ் தள கணக்கை டேக் செய்து புகார் அளித்து தங்களது கோபத்தையும், விரக்தியையும் வெளிப்படுத்தினர்.
நாட்டின் சிறந்த பயணிகள் ரயில்களில் ஒன்றாக கூறப்படும் வந்தே பார்த் ரயிலின் தரத்தை பாருங்கள் என்றும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் வந்தே பார்த் ரயில் சேவை மோசமாக இருப்பதாகவும் பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தம் தெரிவித்த வடக்கு ரயில்வே குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் பெட்டியில் நீர்க்கசிவு ஏற்பட்டதாகவும், உடனடியாக அதனை ரயிலில் இருந்த ஊழியர்கள் சரிசெய்ததாகவும் தெரிவித்துள்ளது.