புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் தாதாவை 92 முறை குத்திக் கொன்ற 4 கைதிகளின் வீடியோ வெளியாகி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 உதவி சூப்பிரண்டு உட்பட 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். டெல்லி ரோஹிணி நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய பிரபல தாதா டில்லு தஜுபுரியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரைப் போலவே இன்னொரு கிரிமினல் கும்பலுக்கு தலைமையாக இருந்த ஜிதேந்தர் கோகோய் என்பவரும், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லு தஜுபிரியா, மற்றொரு கும்பலைச் சேர்ந்த ஜிதேந்தர் கோகோய் மற்றும் அவரது ஆதரவு கும்பலால் சிறைக்குள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. முதல் வீடியோவில் திகார் சிறையில் டில்லு தஜுபிரியாவை கிட்டத்தட்ட 92 முறைக் குத்திக் கொல்லப்பட்டது வெளியானது.
தற்போது இரண்டாவது வீடியோ வெளியாகி உள்ளது. அதில் டில்லு தஜுபிரியாயின் உடலை சிறைத்துறையினர் எடுத்து செல்லும் போது, கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களில் சிலர், தொடர்ந்து டில்லு தஜுபுரியாவை கத்தியால் குத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ வைரலான சில மணி நேரங்களுக்குப் பின்னர், டில்லு தஜுபுரியாவை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவத்தில் அலட்சியமாக பணியில் இருந்த 3 உதவி கண்காணிப்பாளர்கள், 4 வார்டன்கள் உள்பட 7 பேர் சஸ்பெண்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் டெல்லி துணை நிலை வி.கே.சக்சேனாவிடம், திகார் சிறை இயக்குனர் தரப்பில், சிறைக் கைதி கொலை சம்பவம் குறித்த விரிவான அறிக்கை அளிக்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘டில்லு தஜுபுரியாவை ஜிதேந்தர் கோகோய் கும்பலைச் சேர்ந்த தீபக் என்கிற தீதர், யோகேஷ் என்கிற துண்டா, ராஜேஷ், ரியாஸ் கான் ஆகிய நான்கு பேரும் 92 முறை குத்திக் கொன்றனர். அவர்கள் சிறைச்சாலையின் முதல் தளத்தில் இருந்து வெளியே வந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிந்து, நீதிமன்ற வாக்குமூலத்திற்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் திகார் சிறையில் நடந்த மற்றொரு கைதி கொலையில், பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் நெருங்கிய கூட்டாளி தெவாடியா என்பவர் கொல்லப்பட்டார். இதுகுறித்தும் உயர்மட்ட விசாரணை நடக்கிறது’ என்றனர்.